![fg](http://image.nakkheeran.in/cdn/farfuture/G7Eu26JNMKVJuKc_NtT6xeGr1tNbtMkdLLg4uxN8Gqs/1593410965/sites/default/files/inline-images/jkk.jpg)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்க தேவையில்லை. எனவே அரசு தேவை என நினைத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.