Skip to main content

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... மா.கம்யூ., அறிவிப்பு 

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
kb

 

சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு நாளை (26.06.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. நடந்த சம்பவம் இரண்டு மனித உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம் என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு முறையும் காவல்துறையின் அதிகார அத்துமீறல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு புனைதல், பாலியல் வன்முறை, சாதியக் கொடுமை, மனித உரிமை மீறல் போன்ற குற்றங்கள் மீது உரியமுறையில் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக மாறி இருக்காது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, காவல்துறையினரின்  கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டின் மீது  தமிழக அரசு குறைந்தபட்ச நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதே சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்புலமாக உள்ளது. குற்றம் செய்த காவலர்களை பாதுகாக்கக்கூடிய முயற்சியிலேயே அரசும், நிர்வாகமும் ஈடுபடுகின்றன. இதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களை குற்றம் செய்ய ஊக்குவிக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் காவல் துறைக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்க முடியும்? அனைத்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பதுதான் காவல்துறை மற்றும் அரசினுடைய கடமையும் பொறுப்புமாகும். உயிரை பறிப்பது அல்ல அவர்களது  பணி.

இச்சூழலில் மக்களின் கொந்தளிப்பை தற்காலிகமாக குறைக்கும் நோக்கில் மேலோட்டமான சில நடவடிக்கைகள் எடுப்பது மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏகோபித்த முழக்கமாக மாறியிருக்கிறது.

எனவே, இக்கொடுமையைக் கண்டித்தும், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர்/ கோட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் நாளை (26.06.2020) ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில், கண்டிப்பாக தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து  கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும், வணிக பெருமக்களும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம். அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

 

கோரிக்கைகள்:

சாத்தான்குளம் காவல் நிலைய  ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் (ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட) சம்பந்தப்பட்ட காவலர்கள்  மீது கொலை வழக்கு, மனித உரிமை மீறல், பொய் வழக்கு போட்டது, மருத்துவ சிகிச்சையை மறுத்தது உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அனைவரையும் முதலில் இடைநீக்கம் செய்ய வேண்டும்.

மனித உரிமை மீறல், காவல்நிலைய துன்புறுத்தல் காரணமாக கணவரையும், மகனையும் இழந்து வாடும் செல்வராணிக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். ஏற்கனவே அறிவித்து இருக்கும் இழப்பீடு போதாது.

ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

கரானா நோய் தொற்று காலத்தில் சாத்தான்குளம் மேஜிஸ்ட்ரேட்  ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோரை ஜெயிலில் வைத்திட ஏன் உத்தரவிட்டார் என்பது சம்பந்தமாகவும், அவர்களுக்கு இருந்த காயங்களை பதிவு செய்யாதது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உடலில் காயங்கள் இருந்தும் மருத்துவர்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறைக்கு ஏன் அனுப்பினார்கள் என்பது குறித்தும், மருத்துவ பரிசோதனை பதிவேடுகளில் காயங்களை பதிவு செய்யாமல் மறைத்துள்ளார்களா என்பது பற்றியும் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அருகாமையிலுள்ள சிறையில் வைத்திடாமல் அதிக தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளை சிறையில் அனுமதித்தது குறித்தும், காயங்களை பதிவு செய்யாமல் காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தது குறித்தும் சம்பந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கோவில்பட்டி  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எண்.1 அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோர் இறந்து போனது தொடர்பாக நடத்தி வருகின்ற விசாரணையில் அனைத்து ஆவணங்களையும், காவல்நிலைய, சப்ஜெயில் சிசிடிவி பதிவுகளையும் உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் மரணம் என அங்கீகரித்து அதற்குரிய மேல் நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.