Skip to main content

''எங்களுக்கே இந்த நிலைமையா?'' -கரோனா ரிசல்ட் குளறுபடியால் போர்க்கொடி தூக்கிய செவிலியர்கள்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

salem government hospital nurses coronavirus samples testing issues

 

 

சேலம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் பணியாற்றும் 11 செவிலியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 26 செவிலியர்கள் தற்போது இரண்டாம் முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம், யாருக்கும் தொற்று இல்லை என்று கூறி அவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. 

 

வீடு திரும்பிய இரண்டாவது நாளில், அவர்களில் 2 செவிலியர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவில் சில குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதைகேட்ட அவ்விரு செவிலியர்களும் அதிர்ச்சி அடைந்தனர், கதறி அழுதனர். 

 

நோய்த்தொற்று இல்லை எனக்கூறியதையடுத்தே நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவர்கள், கணவன், குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சொல்லப்பட்டதால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 26 செவிலியர்களும் கடும் விரக்தி அடைந்தனர். தங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சமும் அடைந்துள்ளனர்.

 

மருத்துவமனை கரோனா ஆய்வுக்கூடத்தின் குளறுபடியால் அதிருப்தி அடைந்த செவிலியர்கள், ஜூலை 28- ஆம் தேதியன்று இரவு பணிக்கு செல்ல மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களிடம் மருத்துவமனை தரப்பில், தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. இனி இதுபோன்ற குளறுபடிகள் நடக்காது என்று வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தனர். அதன்பிறகே செவிலியர்கள் இரவுப்பணிக்கு சென்றனர்.

 

இது தொடர்பாக செவிலியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். ''இன்றைய நிலையில், கரோனா வார்டில் பணியாற்றுவது என்பதே கடும் சவால் நிறைந்தது. இந்நிலையில், நோய் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் குளறுபடி செய்வது எங்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. செவிலியர்களுக்கே இந்த நிலை என்றால், இங்கே நம்பிக்கையுடன் வரும் சாமானியர்களின் நிலை என்ன என்பது குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது,'' என்கிறார்கள் செவிலியர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.