Skip to main content

கரோனா பீதியில் சேலம் அரசு மருத்துவர்கள்! ஜி.ஹெச். பணியாளர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று!!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

SALEM GOVERNMENT HOSPITAL DOCTORS, WORKERS CORONAVIRUS PEOPLES


சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் மூலம் தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என மற்ற மருத்துவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். 

 

சேலம் மாவட்டத்தில், நேற்று (ஜூலை 7- ஆம் தேதி) வரை மொத்தம் 1340 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் மட்டும் இதுவரை 301 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று வரை சேலம் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் என மொத்தம் 869 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

செவ்வாய்க்கிழமை அன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நோய் குணமடைந்த 52 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த ஐந்து பேருக்கும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, இருதய நோய் என வேறு சில நோய்களின் தாக்கமும் இருந்தது. 

 

கரோனா நோயாளிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மெடிக்கல் பிளாக்' கட்டடத்தில் நான்கு தளமும் கரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் படுக்கை வசதிக்காக தரை தளத்தில் இருந்த மருத்துவமனை முதல்வர் அலுவலகமும் பி.எம்.எஸ்.எஸ்.ஒய் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. 

 

கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு முதல் 7 நாள்களுக்கு கரோனா வார்டில் பணி ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது ஏழு நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த இரு சுழற்சியின்போதும் அவர்கள் எக்காரணம் கொண்டு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடையாது. மூன்றாவது ஏழு நாள்கள், கரோனா தவிர்த்த பிற மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுழற்சி முறையில் மருத்துவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பும் மருத்துவர்களுக்கு அப்போதும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

துறைத்தலைவர்களுக்கு வழக்கம்போல் நிர்வாகப் பணிகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. உதவி / இணை பேராசிரியர் அந்தஸ்திலான மருத்துவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே கரோனா பணி ஒதுக்கப்படுகிறது. கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சேலம் குரங்குசாவடி அருகே உள்ள ஜி.ஆர்.டி. மற்றும் ராமகிருஷ்ணா காந்தி சாலையில் உள்ள விண்சர் கேஸில் ஆகிய தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்திக் (குவாரண்டைன்) கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவாரி உணவகத்தில் இருந்து உணவுப் பொருள்கள் தருவித்து வழங்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியில் இருந்த 6 மருத்துவமனைப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது, ஒட்டுமொத்த அரசு மருத்துவமனை வட்டாரத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று கண்டறியப்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் மட்டுமின்றி, அதே காலக்கட்டத்தில் கரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இது, மற்ற மருத்துவர்களிடையே உள்ளூர ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

http://onelink.to/nknapp

 

''சென்னையில் எம்.எம்.சி., ராஜிவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் மருத்துவமனை பணியாளர்களுக்குதான் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர்தான் மருத்துவர்களுக்கும் தொற்று உறுதியானது. 20- க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மூன்று அரசு மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்களுக்கு மட்டுமின்றி கரோனா தவிர்த்த வழக்கமான மருத்துவப் பணிகளில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்கள், இதர பணியாளர்களுக்கும் என்- 95 மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு வழங்க வேண்டும். அதேபோல், சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே அரசு மருத்துவமனைகளில் இப்போதுவரை கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு உடல்நலப் பிரச்னைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சளி தடவல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

 

இன்றைய நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய எல்லோரையுமே நாம் கரோனா பாசிட்டிவ் உள்ளவர் போல கருதி அதற்குரிய பரிசோதனைகளைச் செய்தால்தான் நோய்த்தடுப்புப் பணிகளை இன்னும் வேகமாகச் செய்ய முடியும்,'' என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

 

ஒரு சிறு கவனக்குறைவும் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடக்கூடும் அபாயம் இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி, தமிழக அரசும் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.