Skip to main content

மகளுக்கு கரோனா; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை! அதிகாரிகள் அலட்சியத்தால் நடந்ததா?

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

salem district nethimedu old women self quarantine incident police

 

சேலம் நெத்திமேடு பழனியப்பா காலனியைச் சேர்ந்தவர் சாந்தா (72). இவருக்கு 38 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வந்து தாயுடன் வசித்து வருகிறார்.

 

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சாந்தாவின் மகளுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடன் வசித்து வந்த சாந்தாவுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்று தெரிய வந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த சில நாள்களாக அவருடைய வீடும் பூட்டப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

உறவினர்கள் சிலர், நேற்று முன்தினம் (ஜூலை 12) இரவு முதல் சாந்தாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர் போனை எடுத்துப் பேசவில்லை. இதையடுத்து திங்களன்று (ஜூலை 13) காலையில் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். 

 

கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் அவர் வெளியே சென்றதாக பார்த்ததில்லை என்று அக்கம்பக்கத்தினர் பலரும் கூறியதை அடுத்து, சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மூதாட்டி தூக்கில் சடலமாகக் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து உடனடியாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ''மகளுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து, சாந்தாவுக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. அவருக்கு 'நெகட்டிவ்' என ரிசல்ட் வந்த பிறகும்கூட அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சொன்ன மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா, தற்கொலை செய்து கொண்டுள்ளார்,'' என்றனர்.

 

எனினும், மூதாட்டியின் தற்கொலை குறித்து காவல்துறை வேறு பல கோணங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும், அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நெத்திமேட்டிலும் மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.