Skip to main content

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

Saiyan, Manoj's bail pleas dismissed in Kodanadu murder-robbery case

 

 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை  ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், அவர் மறைவிற்கு பிறகு,  கடந்த 2017ம் ஆண்டு உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் நிலையத்தினர், சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஏற்கனவே ஜாமீன் பெற்ற நிலையில், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உடன் சேர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேட்டியளித்து கலவரத்தை தூண்டுகிறார் என காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து,  ஜாமீனை ரத்தாகி, இருவரும் மீண்டும்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். 

 

இந்த மனுக்கள் மீது,  நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை ஜாமீனில் விடுவித்தால், அரசு தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும்,  மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்படவுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுமில்லை என வாதிட்டனர். 

 

சயான், மனோஜ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களைக்  கேட்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியன் அளித்த தீர்ப்பில்,  இருவரையும்  ஜாமீனில் விடுவிக்க மறுத்து,  மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்