2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகளும், விசாரணைகளும் தற்பொழுது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளார்.
அப்பொழுது சென்னை கடற்கரை நோக்கிச்செல்லும் மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர் சதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவை அவர் படித்து வந்த கல்லூரிக்கே சென்று தாக்கியது தொடர்பாக சதீஸ் மீது மாம்பலம் காவல்நிலைத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.