ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக யாராவது புள்ளி விபரங்களுடன் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் கூறினார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2012 முதல் 2014 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் என்பது ஆதாரமற்றது. புள்ளி விபரங்களுடன் எங்களுக்கு புகார் கிடைக்கவில்லை. அப்படி யாராவது ஆதாரத்துடன் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். வெறும் மொட்டை கடிதத்திற்கெல்லாம் பதில் கூற முடியாது என்ற அவர், அரசு நிர்வாகத்தில் இந்திய அளவில் தமிழகம் தான் முதலிடம் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மகளிர் முன்னேற்றத்திற்கு 78 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவரிடம் ஒரு நிருபர் அரசு நிர்வாகத்தில் எதில் முதலிடம் என்ற கேள்வியை ஆரம்பம் முதலே கேட்டு வந்தார் அதற்கு அமைச்சருடன் வந்தவர்கள் காது கேட்கலே என சைகையால் கூறி விட்டுச் சென்றனர்.