Skip to main content

பாமகவின் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாநில சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள்

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

 


பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.  இதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பாலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

 

p


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உச்சநீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர், அதாவது 10 விழுக்காட்டினர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை.  இது நியாயமல்ல. இனி வரும் காலங்களிலாவது  உச்சநீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு  உரிய பிரதிநிதித்துவம் வழங்க உச்சநீதிமன்ற கொலீஜியம் முன்வர வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

 

2.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் மரபு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி என்பது நீதி வழங்குவது மட்டுமின்றி நிர்வாகத்துடனும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். இத்தகைய பதவியில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும்போது தான் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளையே நியமிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

p

 

3. மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (ளிஙிசி) இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 16வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவை சேர்ப்பதற்காக 117 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலைப் பணியிலேயே ஓய்வு பெற வேண்டியிருக்கிறது. இந்நிலையை மாற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்த பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

4. சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனர் மருத்துவர் அய்யா மேற்கொண்ட முயற்சிகளால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 2006&ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு, அதற்கடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதேபோல், மத்திய அரசின் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

இந்த சமூக அநீதியைப் போக்கவும், இட ஒதுக்கீடு தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்கு  உதவும் நோக்கத்துடனும் சென்னையில் சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை அமைக்க வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தீர்மானிக்கிறது. இந்த மையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களும், நீதித்துறை வல்லுனர்களும் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

 

5. உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றால் 2897 கி.மீ தொலைவுக்கு சுமார் 50 மணி நேரம் தொடர்வண்டியில் பயணம் செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களால் இது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்க இந்தியாவின் நான்கு திசைகளிலும் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளைகளை அமைக்க வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 229 ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தென் மாநிலங்களைச் சேர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது

.

6. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 06.12.2006 அன்று இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பின் 4 குடியரசுத் தலைவர்கள் மாறிவிட்ட போதிலும், இந்த கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்  348(2) பிரிவின்படி குடியரசுத் தலைவரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்று இந்தி அல்லது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க ஆளுனருக்கு அதிகாரம் உண்டு. இந்தப் பிரிவை பயன்படுத்தி பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

7. தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.  இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதிகள், தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010&ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செல்லும்; ஆனால், ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஆனால், அப்போது ஆட்சியிலிருந்து திமுக அரசு அத்தகைய கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாத நிலையில், உறுதி செய்யப்படாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு தொடருவதாகக் குற்றஞ்சாட்டி அதனடிப்படையில் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதையேற்று இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69 விழுக்காடு  இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

8. தமிழ்நாட்டில் திருநங்கையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள திருநங்கை மற்றும் திருநம்பியர்களின் முன்னேற்றத்திற்காக சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை  தீவிரமாக ஆதரிக்கிறது.

அதேநேரத்தில் திருநங்கையர்களுக்கு சமூகநீதி வழங்குவதாகக் கூறி, அவர்களை மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவில் தமிழக அரசு சேர்த்துள்ளது. இதனால் திருநங்கையர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

திருநங்கையர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அதற்கு இணையான இடஒதுக்கீடு அளிப்பது தான் மிகச் சரியானதாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது.

 

9.  தமிழகத்தில் பணியாற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே மன அழுத்தத்தைப் போக்க,  அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உயர்நீதிமன்றம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் பணிமாற்றம் செய்யப்படும்போது அவர்களுடைய விருப்பங்கள் கருத்தில் கொள்ளப் படுவதில்லை. கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படுவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருணை உள்ளவர்கள் மட்டுமே அவர்கள் விரும்பும் இடங்களில் பணிபுரிய முடிகிறது என கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே கவலை கலந்த மனநிலை காணப்படுகிறது. அவர்கள் கடுமையான மனஅழுத்தத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுடைய பணி விதிகள் கடுமையாக இருக்கிறது.  ஓவ்வொரு மாதமும் எவ்வளவு வழக்குகள் முடிக்கவேண்டுமென்று வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த நீதிபதிகளின் பதவி உயர்வு தடைபடுகிறது.

சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதிபதிகள் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு அவலமான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே வருத்தம் நிலவுகிறது. இந்நிலை உடனடியாக மாற்றப்பட்டால் தான் கீழமை நீதிபரிபாலன முறையை வலுப்படுத்த முடியும். எனவே, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி மன அழுத்தத்தை போக்க வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

 

10. தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்

 தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெற்று 15 மாதங்கள் கடந்தும் வெற்றிபெற்றவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பார்கவுன்சில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற 25 உறுப்பினர்களுக்கும் இன்னும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை. தமிழத்தில் முறைப்படி பார்கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தான் பார்கவுன்சில் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களை அவர்களுக்குரிய அதிகாரத்துடன் செயல்பட உச்சநீதிமன்றம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

11.  தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ  சமூகப் பாதுகாப்பு படை

தமிழகத்தில் பொய், வெறுப்பு, சாதி அரசியல்களால் ஒரு தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர்; பழிவாங்கப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதை முதன்மைக் கடமையாக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கருதுகிறது. அதற்காக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் சமூகப் பாதுகாப்புப் படை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. காவல்நிலைய அளவில் தொடங்கி மாநில அளவு வரை இந்த அமைப்பின் சார்பில் துணைக் குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சட்ட  உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்குவர்.

 

12. மருத்துவர் அய்யா அவர்களின் 80&ஆவது பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்

 வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனரும் தமிழகத்தில் மட்டுமின்றி  இந்தியா முழுவதும் தந்தை பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக்காக போராடி வரும் சமூகநீதிப் போராளியுமான மருத்துவர் அய்யா அவர்கள் 80 வயது நிறைவு நாள் ஜீலை 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமூகநீதி நாளாக  தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தீர்மானிக்கிறது. ஜூலை 25&ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை உறுதியேற்றுக் கொள்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.