Skip to main content

ஆணவக் கொலையா? காதலன் காவல் நிலையத்தில் புகார்!

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
savithiri - viveck s.p office




புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தோப்புக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அருகே உள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் மகள் சாவித்திரி. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இளங்களை மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 

  
இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் உறவினர்களுக்குத் தெரிந்தபோது எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், சாவித்திரியை வேறு ஒரு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது. அதனால் சாவித்திரி – விவேக் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் உதவியுடன் ஒரு காரில் கோயம்புத்தூர் சென்றுள்ளனர்.


குளித்தலை என்ற இடத்தில் காரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது இளம்பெண் காரில் இருப்பதைப் பார்த்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் விவேக்குக்கு திருமண வயதை அடைவதற்கு நான்கு மாதங்கள் உள்ளது என்பதை அறிந்த போலீசார் இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் கவுன்சிலர் கருப்பையா மன்றும் பெண்வீட்டார் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பெற்றோருடன் தன்னை அனுப்ப வேண்டாம் என்றும் மீறி அனுப்பினால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும், ஏற்கனவே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளதையும் விளக்கி தன்னை காப்பகத்திற்கு அனுப்புங்கள் எனவும் போலீசாரிடம் சாவித்திரி கூறியுள்ளார். 


ஆனால், போலீசார் “காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். நான்கு மாதங்கள் கழித்து விவேக்குடன் திருமணம் செய்து வைக்கப்படும்”; எனத் தெரிவித்து அனுப்பியுள்ளனர்.


இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரவு சாவித்திரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி சடலத்தை அன்று இரவே உறவினர்கள் எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விவேக் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி. பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


அந்த மனுவில் கடந்த புதன்கிழமையன்று காலை 9 மணியளவில் சாவித்திரியின் உறவினர்கள் தன்னை கடத்திச் சென்று கொலைசெய்யும் நோக்கத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும், பகல் நேரமானதால் அங்கிருந்து தப்பித்து விவேக் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது காதலி சாவித்திரி தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் எனவும் நிச்சயமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி கூறுகையில், எங்கள் சங்கம் சார்பிலும்  காவல்  கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. நடந்துள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயமாக இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியே தற்கொலையாக இருந்தாலும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது ஏன்?


எனவே, இது திட்டமிடப்பட்ட சாதி ஆணவப்படுகொலையே! எனவே, நடந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். தன்னை பெற்றோருடன் அனுப்ப வேண்டாம் எனக்கூறிய பெண்ணிடம் உரிய பாதுகாப்புத் தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்கத் தவறிய போலீசார் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசம், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.