Skip to main content

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Publish Guidelines for Women's Enfranchisement Scheme

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடர்பான விண்ணப்பப் படிவத்தைத் தமிழக அரசு வெளியிட்டது. அந்தப் படிவத்தில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் சரிபார்க்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண், வாடகை வீடா, ஆதார் எண் உள்ளிட்ட 13 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. சொத்து விவரங்கள், வாகனம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மின் இணைப்பு எண், திருமண நிலை, தொலைப்பேசி எண் உள்ளிட்ட கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளையின் பெயர், வங்கியின் பெயர் குறித்த கேள்விகளும் இடம் பெற்று இருந்தது.

 

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறையானது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 36 ஆயிரம் ரேசன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெறும் முகாம் நடத்தப்படும்.

 

இதில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்பட உள்ளது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். அதன்படி நியாய விலைக் கடைகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தில் பணியாற்ற உள்ளனர். முன்னதாக இந்தத் திட்டத்திற்கான சிறப்பு அலுவலராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்