Skip to main content

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்திய கும்பல்!

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

tt

 

பொம்மிடி அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஒரு கும்பல் காரில் கடத்த முயன்ற சம்பவத்தில் இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுரெட்டியூரைச் சேர்ந்தவர் மனோ (23). துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த பிரியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இருந்தே இரு தரப்பு பெற்றோர், உறவினர்கள் தரப்பில் அவர்களுக்கு மிரட்டல் இருந்து வந்தது.  

 

இந்நிலையில், கடந்த பிப். 27ம் தேதி, மனோவும் பிரியாவும் பொம்மிடிக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த பிரியாவின் உறவினர்கள், பொம்மிடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வழிமறித்தனர். அவர்கள் மனோவை கீழே தள்ளிவிட்டு, பிரியாவை தங்களுடைய காரில் கடத்திச்சென்றனர். பின்னர் மனோவும் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார்.  

 

அப்போது எதிரில் பொம்மிடி காவல்துறை வாகனம் வந்ததை அடுத்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் காரை சோதனை செய்தனர்.  காருக்குள் பிரியாவுடன் பர்கூரைச் சேர்ந்த நிர்மலா தேவி (42), ரேகா (32) ஆகியோர் இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை கடத்தியதாக இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மூவரையும் தேடி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்