திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா, கதிர்மலை முருகன் ஆலயம் உள்ளது. இப்பகுதியில் பலர் அடிக்கடி ஆடு, மாடுகளை மேய்க்கச்செல்வர். நேற்று ஆடு மேய்க்கச் சென்ற சிலர் குறிப்பிட்ட இடத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் அங்குள்ள 100 நாள் வேலைத் திட்ட குழியில் ஒரு இடத்தில் ஈக்கள் மொய்த்துக்கொண்டு இருந்தன. அருகே இருந்த பாறைகளில் இரத்தக் கரைகள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியான போலீசார் உடனடியாக வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அந்த குழியை லேசாகக் கிளறிப் பார்த்த போது, 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் அங்குள்ள பாறை மீது கல்லால் அடித்துக் கொலை செய்து 100 நாள் வேலைத் திட்டக் குழியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
திருப்பத்தூர் எஸ் பி ஆல்பட் ஜானுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து புதைக்கப்பட்ட அந்த சடலத்தை தோண்டி எடுத்தனர். 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடல் ஆடைகள் இன்றி புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாறை மீது பதிந்திருந்த ரத்த கறைகளை சேகரித்து கொலை செய்யப்பட்டுள்ள நபர் யார் ?எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? இளைஞரை அடித்துக் கொலை செய்து விட்டு அரைகுறையாக புதைத்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தப் பகுதியில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடியினர் சுற்றுலா தளம் போல் சென்று வருவதும், சிலர் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.