ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு நிரந்தர தீர்வு காண அமைச்சர் சு.முத்துசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருந்துறை சிப்காட் இன்டஸ்டிரீஸ் அசோசியேஷன் தலைவர் மகாலிங்கம், செயலாளர் சுந்தர் ஆகியோர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: “பெருந்துறை சிப்காட்டில் சுமார் 250 கம்பெனிகள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து மின் கட்டணமாக சுமார் ரூ.50 கோடி செலுத்துவதுடன், ஜிஎஸ்டி வரியாக சுமார் ரூ.100 கோடி செலுத்தி நல்ல முறையில் இயங்கி வருகிறது. தற்போது, இதில் நல்லா ஓடையில் செல்லும் உபரிநீர் பிரச்சனையால் அருகில் உள்ள கிராம மக்களின் அதிருப்தி காரணமாக சிப்காட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண, நல்லா ஓடை செல்லும் 2,600 மீட்டர் நீளத்திற்கு 3 பக்கமும் கான்கிரீட் தளம் அமைத்து, அதில் நீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். சிப்காட்டில் உள்ள தாழ்வான நிலப்பரப்பில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து அந்த நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலையை நிறுவி அந்த நீரை சுத்திகரித்து திரும்பவும்(மறு சுழற்சி முறையில்) சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் வழங்க வேண்டும். இந்த தீர்வினை போர்க்கால அடிப்படையில் அரசு மற்றும் சிப்காட் நிர்வாகம் இணைந்து விரைவாக செயல்படுத்தி பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.