
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி, அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் 26 கண்டறியப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வேங்கைவயல் வரவைத்தார். அதிகாரிகள் விசாரணை செய்து போலீசார் தனிப்படை அமைத்தனர். அடுத்த நாள் வேங்வையல் வந்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் ஆய்வு செய்து தீண்டாமை வழக்கும் பதிவு செய்ய வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த வழக்குகள் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் தற்போது திடீர் திருப்பமாக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை மாற்றி, தாங்கள் சொல்லும் வழக்கறிஞர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யக் கோரி, வேங்கைவயல் பொதுமக்கள் சார்பாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில் விசாரணைக்கு தேவை என்பதால் டிஎன்ஏ சோதனை, உண்மை கண்டறியும் சோதனை என பல ஆய்வுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது திடீரென அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.