Skip to main content

எனது கணவர் தற்கொலைக்குக் காரணம் போலீசாரின் தாக்குதலே... உயர்நீதிமன்றத்தில் தாக்கலான மனு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

Kurumbalaperi Pavoorchatram

 

போலீசார் தாக்குதலால் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் இறந்த விவகாரம் தமிழகமெங்கும் ஒலித்த நிலையில், "என்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம், போலீஸ் எஸ்.ஐ.-க்கள் அடித்த அடியே!" என காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை புதிய மனுத் தாக்கலாகியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலைய எல்கைக்குட்பட்டது குறும்பலாப்பேரி. இங்குள்ள ஆவுடைக்கண் நாடார் தெருவினைச் சேர்ந்த ஜமுனாபாய் என்பவர், தன்னுடைய வழக்கறிஞர் பினேகாஸ் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

 

"கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த அருள்குமார் என்ற அருணாசலத்திற்கும் எனக்கும் திருமணம் நடந்தது. சந்தோஷ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் மீன் விற்பனை செய்து குடும்பத்தினை நடத்தி வந்தார் எனது கணவர். கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போதுமான மீன்வரத்து இல்லாததால் மீன் வியாபாரம் மந்தமானது. அதனால் கீழப்பாவூர் உள்ளிட்ட ஊர்களின் குளத்தில் மீன்பிடித்து அப்பகுதியிலேயே மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 21/05/2020 அன்று மீன் வியாபாரத்திற்காக வெளியே சென்றவர், இரவுப் பொழுதில் தன்னுடைய டூவீலர் இல்லாமல் வீடு திரும்பினார். கீழப்பாவூர் குளத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்துச் சென்றதாகவும், நாளை காலை வந்து காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதால் வீடு திரும்பி விட்டேன்" எனக்கூறினார்.

 

மறுநாள் காலை தன்னுடைய இருசக்கர வாகனத்தை வாங்க காவல்நிலையம் சென்றவர் இரவு 09.00 மணி வரை ஆகியும் வீடு திரும்பாததால், நானே குழந்தைகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றேன். அங்கே என்னுடைய கணவரை ஜட்டியுடன் நிற்க வைத்து அடித்துக் கொண்டிருந்தனர் எஸ்.ஐ.-க்களான சுரேஷ்குமாரும், பலவேசமும். நான் கத்திக் கூப்பாடு போட்ட நிலையில் சிறிது நேரம் கழித்துக் காயங்களுடன் வீட்டிற்கு அனுப்பினார்கள். இருப்பினும், இருசக்கர வாகனத்தைக் கொடுக்கவேயில்லை. இதனால் மனமுடைந்து இரவெல்லாம் புலம்பிய எனது கணவர் மறுநாள் காலையில் வெளியே சென்று விஷமருந்தி தற்கொலை செய்த நிலையில் மீட்கப்பட்டார். என்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம் அந்த இரு எஸ்.ஐ-க்களுமே! மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாநில முதல்வர் வரை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் இப்பொழுது இங்கு முறையிட்டுள்ளேன். எனது கணவரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்." என்கின்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது அந்த மனு.

 

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு வர, வழக்கை விசாரித்தவர், "வழக்குத் தொடர்பாக ஆலங்குளம் டி.எஸ்.பி. விசாரணை செய்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கினை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.