
கோவை மாவட்டத்திற்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசின் தொழில்துறை மூலம், அமெரிக்க, இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் (US- India Strategic Partnership Forum) சார்ந்த அமைப்பான, அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி (US- India Friendship Alliance) , 486 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, தமிழகத்திற்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. சீனாவில் உள்ள ஃபோஷன் (Foshan) நகரில் இருந்து வான்வழியாக புதுடில்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சரக்கு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கரோனா நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும்.
அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தின் இந்த உதவிக்கு, தமிழக அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.