
கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் தனியார் மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவர் டி ஃபார்ம் படித்துவிட்டு மூன்று வருடமாக மருந்தகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மருந்தகத்தில் ஆண்மை சக்தி பெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் நாட்டு மருந்து கிடைக்கும் என ஆரம்பித்த இந்த தனியார் மருந்தகத்தில் தற்போது சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சங்கராபுரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் சங்கராபுரம் தனிப்பிரிவு காவலர் இளந்திரையன் நேரில் சென்று அருண் மருந்தகத்தில் சோதனை செய்த போது கருக்கலைப்பு செய்வதற்கான உபகரணங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, மருந்தகத்திற்கு வந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் விசாரணை செய்தபோது கருக்கலைப்புக்கு வந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்பிறகு மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு உதவியாக இருந்த மேலும் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற கருக்கலைப்புச் சம்பவம் நடந்த வனமே உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
போலீசார் மருந்தக உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்ள ரூ.15,000 வசூல் செய்வதாகவும், பெண் குழந்தை உள்ளது எனத் தெரிய வந்தால், கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.