Skip to main content

அயோத்திதாச பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

  Opening of Mani Mandapam with Full Image Statue of Ayodhitada Pandit!

 

தமிழ்நாடு அரசின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நினைவாக 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01.12.2023)  காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ. வேலு, திராவிடர் கழகத் தலைவர் கி.விரமனி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

திராவிடப் பேரொளி அயோத்திதாசர் 1845 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தவர். இவர் தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் வல்லக்காலத்தி அயோத்திதாசர் எனும் தனது ஆசிரியர் பெயரைத் தன் பெயராகவே மாற்றிக் கொண்டார். இவர் சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், பதிப்பாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர் என்ற பன்முக ஆற்றலைப் பெற்றிருந்தார்.

 

  Opening of Mani Mandapam with Full Image Statue of Ayodhitada Pandit!

 

அயோத்திதாசப் பண்டிதர் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்களைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக சீர்திருத்தப் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கி சாதி ஒழிப்பையும், சமூக விடுதலையையும் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். தந்தை பெரியார், அயோத்திதாசப் பண்டிதரை பற்றி குறிப்பிடும்போது. "என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி" என்று கூறினார். அயோத்திதாசர் சாதி, மத வேறுபாடுகளை நீக்கி தமிழன் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டுமென்றார். ஒரு பைசா தமிழன், திராவிடப் பாண்டியன் போன்ற இதழ்களை நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில், சமூகம் சாதியால் பிளவுற்று இருந்தபோது இந்தியாவின் விடுதலை முதலில் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டுமென்று கூறினார்.

 

சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால் உலகம் மாறுபட்டு தள்ளப்பட்டபோது உரிமைக் குரல் கொடுத்த நல்லோர்கள் வரிசையில் அயோத்திதாசப் பண்டிதரை மக்கள் அனைவரும் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றி புகழ்ந்தனர். 1892 ஆம் ஆண்டு சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு இரண்டு கோரிக்கை வைத்தார். அதில் ஒன்று கல்வி உரிமை, மற்றொன்று நில ஒதுக்கீடு ஆகும். அயோத்திதாசர் தாமே முன்னின்று தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு கல்வி வசதியோடு உதவித் தொகை மற்றும் அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி கண்டார் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.