Skip to main content

ஒரு பானை தண்ணீர் 15 நாட்களுக்கு போதும்... மரங்களுக்காக 200 மண் பானைகளை வழங்கிய மாணவர்கள்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்களின் சொந்த முயற்சியில் அந்த கிராமத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், வரத்துவாய்க்கால்கள், அணைக்கட்டுகளை சீரமைத்து வருகின்றனர். இளைஞர்களின் இந்தபணியை பலதரப்பினரும் பாராட்டினாலும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதியவர்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் சேமிப்புகளை நீர்நிலை சீரமைப்பிற்காக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில், கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தில் முதல்கட்டமாக சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற கூண்டுகள் அமைத்துள்ளனர். மேலும் தினசரி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற பெண்களை நியமித்ததுடன் தண்ணீர் குடங்களை எளிதாக எடுத்துச் செல்ல அதற்காண வண்டிகளையும் இளைஞர்கள் வாங்கி வழங்கி உள்ளனர்.

 One pot of water is enough for 15 days… students who have supplied 200 earthen pots for trees!


இந்நிலையில் செவ்வாய் கிழமை அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி சிவநேசன் ஆகியோர் ஒரு வேனில் சுமார் 200 மண் பானைகளை கொண்டு வந்து கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரிடம் வழங்கினார்கள். மேலும் மரக்கன்றுகளுக்கு தினசரி தண்ணீர் ஊற்றி தண்ணீரை வீணாக்காமல் கன்றுகளுக்கு அருகில் பானையை புதைத்து சிறிய ஓட்டை போட்டு வைத்தார் தண்ணீர் மரக்கன்றின் வேர் பகுதியில் பல நாட்கள் கசிந்து கொண்டிருக்கும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று கூறியதுடன், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் மாணவிகளே செய்து காட்டினார்கள். 

 

 One pot of water is enough for 15 days… students who have supplied 200 earthen pots for trees!


இது குறித்து குருகுலம் சிவநேசன் கூறும் போது.. தற்போது நிலடித்த நீர் பற்றாக்குறையால் மண்ணில் ஈரப்பதம் இல்லை. அதனால் மரக்கன்றுகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் உடனே காய்ந்துவிடும். அதனால் கன்றுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. ஆனால் மரக்கன்றுகளோடு ஊசி முனை அளவு ஓட்டை போடப்பட்ட மண்பானையை புதைத்து தண்ணீர் ஊற்றி வைத்தால் அந்த தண்ணீர் ஒரு வாரத்திற்கு மேல் மரக்கன்றுகளின் வேர் பகுதியில் கசிந்து 15 நாட்களுக்கு மேல் ஈரம் காக்கப்படும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து எங்கள் பள்ளி மாணவர்கள் பானை வழங்க முன்வந்தனர். அவர்களே பானைகளையும் கொண்டும் வந்தனர். அந்த பானைகளை வழங்கியதுடன் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் செய்து காட்டியுள்ளோம். இதேபோல மரக்கன்றுகள் நடப்படும் அனைத்து இடங்களிலும் பானைகளை பயன்படுத்தி கசிவு நீர் பாசனம் செய்தால் அதிகளவில் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.