Skip to main content

மதுரை பாண்டி கோவிலில் முதியவர் தொலைத்த ரூ. 3 லட்சம்! - போலீசார் மீட்டதில் பரவசம்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Old man loses Rs 3 lakh at Madurai Pandi temple

 

எத்தனை வசதியிருந்தாலும், ‘கல்யாண வீட்டுச் சாப்பாட்டு ருசியே தனிதான்’ என்று பந்தியில் அமர்ந்து சாப்பிட விரும்புபவர்கள் அனேகம்பேர். அதேபோல், கோவில் விருந்துகளில் சாப்பிடுவதும், பலருக்கும் பிடித்தமானது.  

 

விருதுநகர் மாவட்டத்துக்காரரான 62 வயதைக் கடந்த அழகிரிசாமிக்கும், அப்படி ஒரு ஆசை வந்தது. இத்தனைக்கும் அவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடந்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது கைப்பையில் சுமார் ரூ. 3 லட்சம் வைத்திருந்தார். ஆனாலும், மதுரை பாண்டி கோவிலுக்குச் சென்ற இடத்தில், அங்கு ஒரு மண்டபத்தில் எல்லோருக்கும் இலவச அசைவ விருந்து பறிமாறியதை அறிந்து சென்றார். வயிறுமுட்டச் சாப்பிட்டார். உண்ட திருப்தியில், தனது பணப்பையை மறந்து வைத்துவிட்டு பேருந்து ஏறினார். விருதுநகர் செல்லும் வழியில் பணப்பை ஞாபகம் வர, பேருந்திலிருந்து இறங்கி, வேறு பேருந்தில் ஏறி, பாண்டி கோவில் மண்டபம் வந்தார். மண்டபத்தில் யாருமே இல்லை, வைத்த இடத்தில் பணப்பையும் இல்லை. குமுறலோடு மதுரை மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகாரளித்தார். 

 

காவல்துறை விசாரணையில், அந்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தியவர்கள், திண்டுக்கல் – மட்டப்பாறையைச் சேர்ந்த, கோயம்புத்தூரில் காவலராகப் பணிபுரியும் பாண்டியராஜன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ‘ஆமாம்.. பணப்பையை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம். காவல்துறையிடம் ஒப்படைக்க நினைத்தபோது, நீங்களே வந்துவிட்டீர்கள். இந்தாங்க அந்தப் பணப்பை’ என்று திருப்பிக்கொடுத்துள்ளார். 

 

பணப்பை தனக்குத் திரும்பக் கிடைத்ததும் ‘மதுரை பாண்டி ஐயா.. போலீசார் உருவத்தில், தொலைந்த பணத்தை எனக்கு கிடைக்கும்படி செய்துவிட்டாயே! உன் மகிமையே மகிமை!’ என்று மனமுருகி மதுரை பாண்டீஸ்வரரை நன்றியோடு வணங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.