Skip to main content

என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து இரவு பகல் பாராமல் செவிலியர்கள் போராட்டம்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Nurses struggle day and night to condemn NLC administration

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 65 ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் ஒப்பந்த கால பணி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் பல்வேறு காரணங்களால் தற்போது பணியில் இல்லை. மீதி 40 பேர் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் ஆள் பற்றாக்குறை இருந்த நேரத்தில் பணியாற்றி நிலைமையைச் சரி செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிர்வாகம் பணி நிரந்தரப்படுத்தும் பணியில் 40 பேரில் 15 பேருக்கு மட்டும் நிரந்தர பணி வழங்குவதாகவும் மீதி உள்ள 25 பேருக்கு பணி வழங்க மறுத்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட என்எல்சி நிர்வாக அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என செவிலியர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட  ஆண் செவிலியர்கள் 10,  பெண் செவிலியர்கள் 15 மொத்தம் 25 பேர் கடந்த 4-ந் தேதி முதல் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் காவல்துறையினர் மறுத்துள்ள நிலையில் இவர்கள் இரவு, பகல், வெய்யில் மழையை பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் மழை பெய்தாலும் குடையைப் பிடித்துக்கொண்டு வெய்யில் மழையில் குழந்தைகளுடன்  குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் பார்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

இதுகுறித்து செவிலியர் சுதா கூறுகையில், என்எல்சி இந்தியா மருத்துவமனை நிர்வாகம் கடந்த 2016 பேப்பரில் விளம்பரம் வெளியிட்டது. அதன் பேரில் விண்ணப்பித்தோம். பின்னர் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது நாங்கள் அனைவரும் ஒப்பந்தகால பணி அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். பணியில் சேர்ந்து அப்போது முதல் இப்போது வரை ரூ. 13 ஆயிரம் கூலி பெற்று வருகிறோம். விடுமுறை எடுத்தால் கூலி இல்லை. இந்த நிலையில் எங்களை நீக்கிவிட்டு இதே இடத்திற்கு மற்றவர்களை நியமித்துள்ளார்கள்.  நாங்கள் கடந்த 7  ஆண்டுகளாக மிகவும் சொற்ப வருமானத்தில் கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றினோம். ஆனால் தற்போது நிர்வாகம் எங்களை அவர்களின் விதிக்குப் பொருந்தவில்லையென நிரந்தர பணி வழங்க மறுக்கிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு எந்த விதி இவர்களுக்குப் பொருந்தியது எங்களைப் பணிக்குச் சேர்த்தார்கள் தற்போது எங்கள் உழைப்பை எல்லாம் சுரண்டிவிட்டுத் தற்போது பணி நிரந்தரம் இல்லை என்கிறார்கள். இனிமேல் நாங்கள் எங்கே போய் வேலை செய்வது. எனவே மீண்டும் வேலை கிடைக்கும் வரை உயிரே போனாலும் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகக் கூறினார். இந்தப் போராட்டத்தில் செவிலியர் மஞ்சுளா, உஷா, சத்யா ஆகிய மூன்று பேரும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.