Skip to main content

கட்சியினர் யாரும் யாரையும் மனம் புண்படும்படி பேசக் கூடாது! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

None of the parties should speak in such a way as to offend anyone! Edappadi Advice !!

 

கட்சியினர் யாரும் யாரையும் மனம் புண்படும்படி பேசக் கூடாது என்று திருக்குறளை மேற்கோள் காட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

 

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக். 27 அன்று நடந்தது. முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். 

 

அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ அதேபோல மாநகராட்சி, நகராட்சித் தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் சிறப்பாக பணியாற்றாதபோதும் கூட வெற்றி பெற்றுவிட்டோம். 

 

தமிழ்நாட்டிலேயே சேலம் மாநகராட்சிக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கி நமது ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம். தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சிக்கு செல்வதோ, சுயேச்சையாக போட்டியிடுவதோ கூடாது. 

 

இன்னும் பத்து நாட்களுக்குள் பகுதி செயலாளர்களை அழைத்துப் பேசுவேன். பூத் கமிட்டி அமைத்து, அதில் அவர்களின் பெயருடன் செல்ஃபோன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும். காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே நேரடியாக பேச இருக்கிறேன். எனக்கு வயிற்று வலி இருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன். ஏனெனில் நமக்கு வெற்றிதான் முக்கியம். 

 

கடந்த காலங்களில் நான், செம்மலை போன்றோர் மக்களிடம் ஓட்டு கேட்டுச் சென்றால், உங்களுக்கு மட்டும்தான் ஓட்டு போடுவேன் என்று கூறுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் யார் ஓட்டு கேட்டுச் சென்றாலும், அவர்கள் அனைவரிடமும் உங்களுக்குத்தான் ஓட்டு போடுவேன் என்கிறார்கள். சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிக்கச் சென்றால்கூட அவர்களிடமும் மக்கள் அதையேதான் சொல்கின்றனர். ஆனால் ஓட்டு யாருக்குத்தான் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் மனதை எளிதில் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

 

வயிற்று வலி பிரச்சனைக்காக எனக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தனர். அப்புறம் ரத்தப் பரிசோதனை செய்தனர். இப்போது, மருத்துவமனையில் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். ஒரு வியாதியை கண்டுபிடிக்கவே இத்தனை டெஸ்டுகள் எடுக்க வேண்டியதிருக்கும்போது, மக்கள் மனசை மட்டும் எப்படி எளிதில் புரிந்துகொள்ள முடியும்?

 

அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என திருவள்ளுவர் கூறியுள்ளார். 

 

தீயில் சுட்டப்புண் ஆறிவிடும். ஆனால் கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர்ந்து பேச வேண்டும். பிறர் புண்படும்படி பேசக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றிக்கு உழைக்க வேண்டும்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 

இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.