Skip to main content

''நிர்மலா சீதாராமன் அவர் கணவர் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டும்''- முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

 "Nirmala Sitharaman should read the book written by her husband"- CM Stalin's speech

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''2015 ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இருந்த பொழுது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்று வரைக்கும் எய்ம்ஸ் செங்கல் தான் இருக்கு. மருத்துவமனை வரல. இப்பதான் அதற்கு டெண்டர் விட்டிருக்காங்களாம். அதாவது 2015 ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து  உருண்டு இங்கு வரவே சுமார் 9 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இனியாவது அதிவிரைவாக கட்டி முடிப்பார்களா? அல்லது இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் வசூல் செய்கின்ற பாஜக அரசுக்கு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தர மனசு இல்லை. இதையெல்லாம் நாம் கேட்பதால், திமுகவை கடுமையாக தாக்குகிறார்கள், பிரிவினையை தூண்டுவதாக திசை திருப்புகிறார்கள், பொய் சொல்கிறார்கள்.

 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார் 'ஒரு காலத்தில் நாம் திராவிட நாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார். அது இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்கான பேச்சே தவிர பிரிவினை எங்கே இருக்கிறது. இதை வெட்டி ஒட்டி வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் அனுப்ப, நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். ராஜாஜியும், காமராஜரும், எம்ஜிஆரும், அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார். நான் அடக்கத்துடன் சொல்கிறேன் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர் தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என வாய் அசைத்து பாடிக்கொண்டிருந்தவர்தான எம்ஜிஆர். இதைப் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தக்கூடிய வாட்ஸ் அப்பில் வருவதை வரலாறு என நம்புவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல. வகுப்பு வாதத்தை துளியும் ஏற்காதவர் காமராஜர். டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை கொளுத்த முயன்றது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் காமராஜர் பெயரை உச்சரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் பற்றி பேசுவதற்கு, அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தினால் மாற்றுக் கட்சி தலைவர்களை கடன் வாங்கி திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி. இப்போதுதான் கனிமொழி சொன்னதால் சிலப்பதிகாரம் புத்தக முன்னுரையையே படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதை அவர் முழுமையாக படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு ஓய்வு கிடைக்கும். அப்பொழுது சிலப்பதிகாரத்தை முழுமையாக படிக்க நேரம் கிடைக்கும். அதற்கு முன் நிதியமைச்சருடைய கணவர் எழுதியுள்ள புத்தகத்தில் 'மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு பேரழிவு இருக்கும்' என தெரிவித்துள்ளார். அந்த புத்தகத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்