
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரியில் 3வது நாளாக இன்றும் மழை பொழிந்து வருகிறது. மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், குமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் தொடர் மழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.