




சென்னை சேலவாயல் கொடுங்கையூர் பகுதியில் உள்ள தென்றல் நகர் 8வது தெருவில் வசித்து வரும் முகமது நியமதுல்லா என்பவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் 8.10 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முகமது நியமதுல்லா பேசுகையில், "நான் பிராமண சமூகத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு இஸ்லாமிய சமூகத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி பொதுவான இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகளுடன் எந்த அமைப்பின் கீழும் செயல்படாமல் இஸ்லாமிய கோட்பாடுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் பயணம் செய்து கற்றுக் கொண்டு வருகிறேன். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பந்தமாக சோதனை செய்வதாகக் கூறி தேசியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வீட்டை சோதனை செய்வதற்கு உரிய ஆணை உடன் வந்து இருந்தனர். அவர்களின் வேலையை அவர்கள் செய்தார்கள். இதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இன்று காலை 5 மணி முதல் 8.10 மணி வரை சோதனை செய்து அவர்கள் எந்த நோக்கத்திக்காக வந்தார்களோ அது சம்பந்தமாக ஏதும் என்னிடம் இல்லை. மேலும் வழக்கு தொடர்பாகத் தேடி வந்த புத்தகங்களோ, மடிக் கணினிகளோ, சீடிகளோ பிற ஆவணங்களோ ஏதும் கிடைக்கவில்லை. என்னிடம் இருந்த கைபேசியை மட்டும் என்னுடைய முழு அனுமதி உடன் வாங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சோதனை செய்தது அவர்களின் கடமை. அதனால் எனக்கு எவ்வித மன உளைச்சலும் ஏற்படவில்லை. நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் தான் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்து இருப்பேன். ஆனால் நான் அவ்வாறு ஏதும் செய்யவில்லை" என்று கூறினார்.