Skip to main content

கொல்லிமலை: மனைவி 'ஒத்துழைக்க' மறுப்பு; 2 குழந்தைகளை 200 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தை!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கொல்லிமலை அருகே, மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது இரு குழந்தைகளையும் 200 அடி பள்ளத்தில் வீசிக்கொன்ற கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.  


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (28). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு இரு குழந்தைகள். மகன், கிரிராஜ் (8); மகள் கவிதர்ஷினி (5). 


சிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் முன்பு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் பாக்கியம் கோபித்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். என்றாலும், கடந்த 7ம் தேதியன்று, குழந்தைகளை மட்டும் கணவர் சிரஞ்சீவி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை (நவ. 13, 2019) அன்று பாக்கியம், உறவினர்களிடம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, சிரஞ்சீவியுடன் குழந்தைகள் இல்லை என தெரிய வந்தது.  


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீக்குப்பாறை காட்சி முனை (வியூ பாயிண்ட்) பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசியெறிந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிரஞ்சீவியை காவல்துறையினர் கைது செய்தனர்.


காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:


எனக்கு சரிவர காது கேட்காது. எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். மது குடிக்கும் பழக்கமும் உண்டு. இதனால் எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார். 


அவரை திரும்பவும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, குழந்தைகளை அழைத்து வந்து உறவினர்கள் வீடுகளில் மறைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் காணாமல் போய்விட்டதாக மனைவியிடம் மிரட்டி வரவைப்பேன். கடந்த சில மாதங்களாகவே பாக்கியம் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் எங்களுக்குள் மேலும் தகராறு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக ஏற்பட்ட தகராறின்போதும் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 7ம் தேதியன்று, மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். 


எப்படியும் குழந்தைகளைப் பார்க்க என் மனைவி வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன். சொந்தக்காரர்களிடமும் சொல்லி அனுப்பினேன். ஆனால் பாக்கியம் வீட்டுக்கு வராததால், குழந்தைகளைக் கொல்ல திட்டம் போட்டேன். அதன்படி சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று, அங்கிருந்து 200 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசி எறிந்தேன். 


இவ்வாறு வாக்குமூலத்தில் சீரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விசாரணையின்போது அடிக்கடி சிரஞ்சீவி முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு, சில நேரங்களில் மூர்க்கத்தனமாகவும் பதில் அளித்ததாகவும் கூறினர். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.