Skip to main content

சாதனை படைத்த சிறுமியை வீடு தேடிச் சென்று வாழ்த்திய எம்.எல்.ஏ!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
The MLA who went in search of the house of the record girl

 

சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிறுமி சுகித்தாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாழ்த்தினார். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று வருபவர் திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன் -பிரகதா தம்பதியரின் மகள் சுகித்தா (12).

 

கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாகத் தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் தங்கம், மற்றும் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளியென 25க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்துள்ளார். 12 வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகை பாடங்களை கற்று, ஆறு வயது சிறுவர் முதல் அனைவருக்கும் இலவசமாகவே சிலம்பம் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி பல்வேறு சாதனை புரிந்த சுகித்தாவின் இல்லத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் நேரடியாகச் சென்று சுகித்தாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். முதல்வர் ஸ்டாலினை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, விரைவில் திருச்சியில் தொடங்கப்படவிருக்கும், ரைபிள் கிளப்பில் கவுரவ உறுப்பினராக இருக்கவும் பரிந்துரை செய்வதாக அவர் உறுதியளித்தார். மேலும், சிலம்ப பயிற்சிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் களம் அமைத்துத் தரப்படும் என்றும் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.