Published on 01/08/2020 | Edited on 02/08/2020

மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சரான தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு அமைச்சரும் அவரின் குடும்பத்தினரும், வைரஸ் தாக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்து சென்னையில் உள்ள இல்லத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஒரு மாதம் கழித்து தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு இன்று காலை தனது குடும்பத்தோடு வருகை தந்தார். சொந்த ஊர் திரும்பிய அமைச்சரை ஊர் மக்களும் அ.தி.மு.க.வினரும் தேங்காய் உடைத்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். சிலர் 'கரோனாவை வென்ற கொங்கு தங்கமே வருக.. வருக' எனக் கோஷமிட்டனர். அமைச்சர் தங்கமணி தனது வீட்டிலும், அலுவலகத்திலும் மக்களைச் சந்திக்க தொடங்கினார்.