
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணியானது கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராமாபுரத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கட்டுமான பணியின் போது கடந்த 12 ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே வைக்கக்கூடிய 2 குறுக்கு தூண்கள் சரிந்து விழுந்தன. இந்த தூண்கள் ஏறக்குறைய 50 முதல் 100 டன் எடை கொண்டவை ஆகும்.
இந்த தூணானது திடீரென சாலையில் சரிந்து விழுந்த போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக நான்கு பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சம்பந்தப்பட்ட எல்.என்.டி ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.