Skip to main content

‘நண்பா.. ஓ.. நண்பா...’ - மது உருவாக்கிய பகை; அரங்கேறிய கொடூரம்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
man who incident his friend for liquor in Coimbatore

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது நந்தனார் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 50 வயது மதிக்கத்தக்க இவர், தான் வசிக்கும் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தனது கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து, போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.   

இந்நிலையில், அதே நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் கணேசன். கோவையில் அரசு மருத்துவமனையில்  தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரும் டீக்கடை வைத்திருக்கும் மணிகண்டனும் நண்பர்களாக இருந்து வந்தனர். மணிகண்டன் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும்போது கணேசன் அவருக்கு உதவியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் தனது நண்பனான மணிகண்டனின் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணிகண்டனிடம் கணேசன் மது கேட்டுள்ளார். ஆனால், ‘சரக்கெல்லாம் கொடுக்க முடியாது. பணம் கொடுத்தா மட்டும்தான் கொடுக்க முடியும்’ எனக் கறாராக கூறியுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இந்த வாக்குவாதம் முற்றி மணிகண்டனும் கணேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பினர். ஆனால், கணேசனுக்கு மணிகண்டன் மீது ஏற்பட்டிருந்த கோபம் நிலையாக இருந்துள்ளது. இந்நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மணிகண்டனின் தொழிலை தடுக்கும் விதமாக மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.  

அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள், மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அப்போது, தனது கடையை அகற்றுவதற்கு கணேசன்தான் காரணம் என நினைத்துக்கொண்ட மணிகண்டன், அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி மாலை கணேசன் தனது வேலையை முடித்துக்கொண்டு வழக்கம்போல் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென குறுக்கே வந்த மணிகண்டன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திடீரென ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த ரீப்பர் கட்டையால் கணேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.       

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் படுகாயமடைந்த கணேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, முன்விரோதத்தால் கணேசனை தாக்கிய மணிகண்டனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு, மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மதுவால் ஏற்பட்ட தகராறில் நண்பனை ரீப்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.