Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணுக்காக ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட நபர் 

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

man who cut off his body part for a woman

 

தேனியில் 47 வயது நபர் ஒருவர் பெண்ணுக்காக தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் சரவணன். 47 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தெரிந்துகொண்ட நாகராணி, தன் கணவரான சரவணனை கண்டித்துள்ளார்.

 

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 29 ஆம் தேதியன்று சரவணன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சரவணன், "நான் தொடர்பில் இருக்கும் பெண்ணுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. அதனால், அந்த பெண்ணுக்கு நான் பணம் தர வேண்டும்” எனக் கூறி மனைவி நாகராணியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

ஆனால், பணம் கொடுக்க முடியாது என நாகராணி மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சரவணன், அவரது வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்று, தனது மர்ம உறுப்பை பிளேடால்  அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சரவணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நாகராணியும் உறவினர்களும், அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நாகராணி அளித்த புகாரின் பேரில், ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், பெண்ணுக்காக தனது அந்தரங்க உறுப்பை நபர் ஒருவர் அறுத்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்