ஆஸ்திரேலியாவிலிருந்து யுரேனியம் கொள்முதல் செய்வதற்காக நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், அதுவே இறுதி உத்தரவாகும். அந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது. உச்சநீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது.’ என வாதிட்டார்.மேலும் அவர்,‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் பொன்மணிக்கவேல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிக்கு வழங்கவில்லை. வரும் 30-ஆம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது’ என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவர் கூடுதல் டிஜிபி என்றும் அதன் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த அறிக்கையையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன்மாணிக்கவேல் கூறிக்கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை. யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமரின் கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப்பெறப்பட்டன. பொன்மாணிக்கவேல் மீட்டதாக தவறான செய்திகளை பரப்புகிறார்.’ என்று தெரிவித்தபோது குறுக்கிட்ட நீதிபதிகள்‘பொன்மாணிக்கவேல் மீட்கவில்லையென்றால் அரசு அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்படாமல், பொன்மாணிக்கவேல் வசம் எப்படி ஒப்படைக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘மாநில அரசின் பிரதிநிதி என்று கூறி பொன்மாணிக்கவேல் சிலைகளை மீட்டதாகவும், அந்த சிலைகள், அது பற்றிய தகவல்கள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை தமிழக காவல்துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கும் போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என்று கூற முடியாது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவை மீண்டும் புனரமைத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பதற்கு சிறப்பு அதிகாரி பொன்மானிக்கவேல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20- ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.