Skip to main content

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கண்ணீருடன் மனு...

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
Kammapuram

 

 

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ளது பெரியக்கோட்டிமுளை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் 40 வயது பெரியசாமி. இவருக்கும் அம்சவல்லி என்பவருக்கும் கடந்த 15 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 15 வயதில் பிரேம்குமார், 13 வயதில் பிரதாப், 10 வயதில் அனுஷ்யா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கட்டிட வேலை செய்வதற்காக பெரியசாமி சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தினமும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரியசாமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பில் இருந்துள்ளனர்.

 

இந்த நிலையில் அவருடன் வேலை செய்து வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், பெரியசாமி மனைவி அம்சவல்லிக்கு போன் செய்து உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் இறந்து போய் கிடந்துள்ளார். அவருடன் வேலை செய்த சக நண்பர்கள் அவரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் அறைக்கு சென்று எழுப்பியபோது அவர் உயிரிழந்த நிலையில், பிணமாக கிடந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது என்ற தகவலை கூறியுள்ளார்.

 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி, அவரது குடும்பத்தினர் செய்வதறியாமல் நேற்று கம்மாபுரம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அங்குள்ள போலீசார் அவர்களை தாசில்தார் அல்லது விருத்தாசலம் சார் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து அம்சவல்லி தனது மூன்று பிள்ளைகளுடன் விருத்தாசலம் தாசில்தார் பொறுப்பு செல்வமணியை சந்தித்து தனது கணவரை மீட்டு தருமாறும் தனது கணவர் இறப்பின் மர்மத்தை உரிய விசாரணை செய்து வெளிக்கொண்டுவர வேண்டும், அவரின் உடலை ஊருக்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

 

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செல்வமணி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். கணவர் இறந்த சூழ்நிலையில் தனது பிள்ளைகளோடு தனது கணவரின் மரணம் எப்படி ஏற்பட்டது, அவர் உடலை ஊருக்கு கொண்டுவர முடியுமா, இப்படி பல்வேறு குழப்பமான நிலையில் உள்ளனர் அம்சவல்லி அவரது பிள்ளைகளும். அந்தக் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது கண்டு கிராமத்து மக்களும் சோகத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.