
திமுக தலைவர் கலைஞர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிகிறது. ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என அவர் கூறினார்.