Skip to main content

குடியுரிமை சட்டத்தால் முதலில் பாதிக்கப்படுபவரே முதல்வர் எடப்பாடி தான் - ஜவாஹிருல்லா விளாசல்!!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

"குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்போகிறார்களோ இல்லையோ, முதலில் பாதிக்கப்படப்போவது தமிழக முதல்வர் எடப்பாடி தான்," என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நாகூர் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை எதிர்த்து நாகூர் பஸ்நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாவோ," மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ,என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மூன்று சட்டங்களும் இந்த நாட்டு மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட திரிசூலமாகும்.இதற்காக ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள கணக்கெடுப்பின்போது கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை என்றால் சந்தேக குடிமகன் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். எப்படி பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் வாசலில் காத்துக் கிடக்கும் ஆபத்து ஏற்பட்டதோ, அதுபோலவே சந்தேக குடிமகன் என்கிற பட்டியலில் இருந்து நம்மை நீக்க தாசில்தார் அலுவலகத்தில் காத்துக்கிடக்க வேண்டிய நிலையாகிடும்.

 

 Jawahirullah speech in nahoor


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த 11 எம்பிக்கள் வாக்களித்தது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது என கூறுகிறார். இதன் பின்னர் இந்த சட்டத்தின் பேராபத்து குறித்து கூறியப்பின்னர், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் எங்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்று பேசுகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தால் முதலில் பாதிக்கப்படுபவரே தமிழக முதல்வர் பழனிசாமி தான் என்பதை அவர் மறுத்துவிட முடியாது. மத்திய அரசு இந்த சட்டத்தை இதற்கு முன்பு கொண்டு வந்திருந்தால் இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்க முடியாது. அவரால் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியிருக்க முடியாது. அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி இன்று முதல்வராக இருந்திருக்கவே முடியாது என்பதை பழனிச்சாமி மறந்துவிடக்கூடாது.

இந்த சட்டத்தின் ஆபத்தை உணர்ந்து அண்டை மாநிலங்கள் போல் தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்றால் தமிழக மக்கள் தீர்மானம் நிறைவேற்றிட வைப்பார்கள்" என்று பேசிமுடித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.