Skip to main content

காவலர்களின் தாக்குதலில் மரணம்... ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு வெளியே வரமுடியாத பிடியாணை!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

cuddalore court order

 

கடலூர் மாவட்டம், பன்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ரேவதி என்பவரது கணவர்  சுப்பிரமணி. கடந்த 2015 ம் ஆண்டு காவல்துறையினரால் ஒரு வழக்கு விசாரணைக்காக நெய்வேலி டவுன்சிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தார்.  சுப்பிரமணி  மரணம் தொடர்பான வழக்கு (குற்ற எண் 269 / 2015 ) சிபிசிஐடி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணையும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் (S.C. No 95/2019) நடைபெற்று வருகிறது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது கொலை வழக்கு (302) பதிவு செய்வதற்கு மாறாக, 304 A II என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது முறையற்றதாகும்.

 

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் வழக்கு துவங்கிய நாள் முதல் இன்று வரை ஒரு நாள் கூட பணியிடை நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர். வழக்கமாக கொலை குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கைது செய்யப்படும் நடைமுறை இவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. அனைத்திற்கும் மேலாக இந்த குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் குற்றம் நடந்துள்ள அதே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர்.

 

இதனால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ரேவதி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள், உறவினர்களையும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கச் செல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வழக்கின் விசாரணைக்கும் முறையாக ஆஜராகாமலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சாட்சிகளையும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து தி ரேவதி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையில்லாததால், காவல்துறை தலைவர் (டிஜிபி) அவர்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட ரேவதி தனக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு ரூ. 30,09,648/- நட்ட ஈடு வழங்கிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையிட்டு மனுவினையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் தற்போதுவரை அவருக்கு நஷ்டஈடு வழங்கவில்லை.  

 

இந்த வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது சௌமியன் மட்டும் ஆஜர் ஆனார். மற்றவர்கள் ஆஜர் ஆகவில்லை. இதனையெடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகத காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் காவலர் செந்தில்வேல் ஆகியோருக்கு வெளியில் வர முடியாத வகையில் பிடியாணையை அறிவித்து நீதிபதி ப.உ செம்மல் உத்திரவிட்டார். மேலும் சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

ஆய்வாளர் ராஜா தற்போது விருத்தாசலத்தில் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர் ஏ1 கொலை குற்றவாளியாக வழக்கில் இருந்து வருகிறார் ஆனால் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கி வருகிறது. இது அனைத்து தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஆய்வாளர் ராஜா அவர் பணிசெய்யும் இடங்களில் பொதுமக்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது நடவடிக்கையை கண்டித்து காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன் தட்டிக்கேட்டார். இதனை மனதில் வைத்து கொண்டு ஏழை மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை தாக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி அராஜக முறையில் நடந்துகொள்ளும் ஆய்வாளர் தொடர்ந்து பணியில் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பேச்சாக உள்ளது.  .

 

எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாண்புமிகு. தமிழக முதலமைச்சரை  நேரடியாக  சந்தித்து முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கணவனை இழந்து தனது குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் அபலைப் பெண் ரேவதிக்கு உரிய நீதி கிடைப்பதற்கு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.