
"தருமபுரம் ஆதீனத்துக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி ஆளுநரை வரவேற்போம்" என்று பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையை நாளை தமிழக ஆளுநர் துவக்கி வைக்க உள்ளார். அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், "இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம்.
தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கான மசோதாவை கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பாஜவிற்கு மாற்று கருத்து கிடையாது. தமிழக மாணவர்களை இந்தி படிக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் தமிழக பாஜகவே அதனை எதிர்த்து போராடும்" என்றார்.