Skip to main content

ஹைட்ரோ கார்பன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மண்ணை மலடாக்கி விவசாயத்தை அழித்து விவசாயிகளை அகதிகளாக விரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு தொடங்கி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் மத்தியில் போராட்டத் தீ பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயல்வது போல போராடிய மக்கள் மீதே வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தார்கள். எத்தனை வழக்கு போட்டு எத்தனை பேரை சிறைக்கு அனுப்பினாலும் பொன் விளையும் பூமியை தரிசாக்கும்  ஹைட்ரோ கார்பன் எடுக்க விடமாட்டோம் என்பதில் ஒட்டு மொத்த விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்த நிலையில் தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதி காவிரி பாசப் பகுதிகளை ஏதோ காரணத்தால் தவிர்த்துவிட்டாலும் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவிப்பு வெளியான பிப் 20- க்கு பிறகு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று அந்த சட்ட முன்வரைவுகள் சொன்னது. ஆனால் அதற்கு முன்பே அறிவித்து வேதாந்தா, ஓஎன்ஜிசி- யிடம் கொடுத்த திட்டங்கள் என்னாகும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே மன்னார்குடியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சில விவசாயிகளை வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஆயத்தமானார் கோட்டாட்சியர். தகவல் அறிந்து சென்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சட்டத்திற்கு புறம்பாக கூட்டம் நடத்தக்கூடாது என்று கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதம் செய்து நிறுத்தினார். அடுத்த நாள் விவசாயிகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்தப் பிரச்சனைகள் இப்படியே இருக்கும் நிலையில் தான் கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதியோ மக்கள் கருத்தோ கேட்கவேண்டியதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பிஆர் பாண்டியன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த நிரந்தரத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 2 திங்கள் கிழமை தொடங்க உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக டெல்லி செல்லும் பி.ஆர்.பாண்டியனை விவசாயிகள் வழி அனுப்பி வைத்தனர்.


இனிமேலாவது தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை உண்டா? இல்லையா? என்பதை தெளிவாக விளக்கினால் விவசாயிகள் சந்தேகமின்றி அச்சமின்றி வாழ்வார்கள்.



 

சார்ந்த செய்திகள்