Skip to main content

கணவனின் முறையற்ற தொடர்பு... ஊரையே அலறவிட்ட மனைவியின் செயல்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

சென்னையில் மணலியில் கணவன் முறையற்ற தொடர்பிலிருந்ததை கண்டித்த மனைவி கதவை தாழிட்டுக்கொண்டு சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அந்த பகுதி மக்களை அலறவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை மணலி ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் கண்ணா-ரேணுகா தம்பதியினர். மதுரையைச் சேர்ந்த ரேணுகாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் கண்ணா திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரமேஷ் கண்ணா ஒரு ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். ரமேஷ் கண்ணா அண்மை காலமாக வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் கண்ணா-ரேணுகா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரேணுகாவுக்கும் கணவன் ரமேஷ் கண்ணாவிற்கும் இடையே முறையற்ற தொடர்பு குறித்து மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேணுகா அறையின் கதவை தாழிட்டுக்கொண்டு  அறையில் இருந்த மூன்று கேஸ் சிலிண்டர்களை திறந்து வைத்துள்ளார். அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்ட ரேணுகா தனக்கு நீதிவேண்டும் என சொல்லியபடி கதவை திறக்க மறுத்தார்.

 

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ரேணுகா கதவை திறக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில் 108 ஆம்புலன்ஸ்-ம் கொண்டு வரப்பட்டது. மேலும் ரேணுகா இருந்த வீட்டை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக போலீசாரின் அறிவுறுத்தல்படி வெளியேற்றப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த மணலி கவுன்சிலர் ரேணுகாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, ரேணுகாவின் தாய், உறவினர்கள் என யார் பேச்சும் எடுபடாமல் போனது. மதியம் சுமார் 12 மணிக்கு கதவை தாழிட்ட ரேணுகா இரவு 8 மணிவரை கதவைத் திறக்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் அவர் இப்படித்தான் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக பூச்சாண்டி காட்டுவார். நாங்களே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகிறோம் என ரவுத்திரமாக பேச தொடங்கினர். இனியும் பொறுக்கமுடியாது என முடிவெடுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்துக்கொண்டே கதவை உடைத்தனர். உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகா மீட்கப்பட்டார். ரேணுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது