Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனை சரமாரியாக வெட்டிய மனைவி! 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Husband in critical stage police arrested his wife and her boy friend

 

தர்மபுரி அருகே, ரகசிய காதலனுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை பார்த்துவிட்ட கணவனை கொடுவாளால் சரமாரியாக வெட்டிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (50) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி காவியா (45 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு மகள் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த ராமன் (26) என்பவருக்கும் காவியாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த ராஜாமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பலமுறை கணவர் எச்சரித்த பிறகும் கூட காவியாவோ, ராமனுடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இப்படியான நிலையில், மார்ச் 27ம் தேதி இரவு ராஜாமணி, காவியா, மகள் ஆகியோர் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் திடீரென்று யாரோ சிலர் முணுமுணுக்கும் சத்தம் கேட்டு, ராஜாமணி எழுந்து பார்த்தபோது அந்த இரவு நேரத்தில் ராமனும், காவியாவும் வீட்டின் ஒரு பகுதியில் தனிமையில் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். கணவர் பார்த்துவிட்டதை அறிந்த காவியா, இனி விபரீதமாக ஏதாவது நடக்கும்  என்பதை உணர்ந்து வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் தலை, கை, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ராஜாமணி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த ராமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கணவனை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப் பக்கமாக பூட்டிய காவியா, கொடுவாளை வீட்டு வாசலில் வைத்துவிட்டு தொப்பூர் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

 

இதற்கிடையே, ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்த  ராஜாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை வெட்டியதாக காவியா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு தனது ரகசிய காதலனும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து காவியா மற்றும் அவருடைய ரகசிய காதலன் ராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், காவியாவை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் ராமனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.