Skip to main content

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Published on 06/07/2020 | Edited on 07/07/2020
 High Court refuses to suspend online classes

 

ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க,  சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை,  ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை புத்தகரம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால், மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை,  ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,  2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக,  உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க,  இரண்டு வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6 -ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இன்று (6-ஆம் தேதி) இந்த வழக்குகள்,  நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ஆம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

விதிமுறைகள் வெளியிடும் வரை, ஆன்லைன் வகுப்புகளை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்