Skip to main content

கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தாது!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தும் எனக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

high court on coopeartive union plea

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய பொறியியல் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் செயலாளராக இருந்த முருகன் என்பவரை ஊழல் வழக்கில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 

இதையடுத்து,  அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பினார். இதனடிப்படையில்,  முருகனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கும் தேவையான அறிவுரைகள் வழங்க இணைப்பதிவாளருக்கு பதிவாளர் உத்தரவிட்டார். 

இந்த நடைமுறைகளை எதிர்த்தும் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தும் என 2015-ல் கூட்டுறவுச் சங்க பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய பொறியியல் தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் செயலாளர் முருகன் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தனியார் பொறியியல் நிறுவனங்களின் ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்தக் கூட்டுறவுச் சங்கத்திற்கு மத்திய அரசோ, மாநில அரசோ எவ்வித நிதியுதவியும் வழங்காத நிலையில், சங்கத்தின் செயலாளரை அரசு ஊழியராகக் கருத முடியாது என்றும், அவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

தமிழக அரசுத் தரப்பில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க விதிகளின்படி கூட்டுறவுச் சங்கங்களை அரசு கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளதாகவும், மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து கடன்பெற்று இயங்கும் இந்தச் சங்கம், அரசின் உதவியுடன் இயங்குகிறது என்றும், அதனால் ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தும் என்றும், முருகனை அரசு ஊழியராகத்தான் கருதவேண்டுமென வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். மத்திய கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை இந்தச் சங்கம் திருப்பி செலுத்திவிடுவதால், அதை அரசு நிதி உதவியாகக் கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கூட்டுறவுச் சங்க ஊழியரை அரசு ஊழியராகக் கருத வேண்டுமெனவும், ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்தும் எனவும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கையையும்,  தனி நீதிபதியின் உத்தரவையும்  ரத்து செய்து  உத்தரவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்