Skip to main content

‘ஜி.டி. நாயுடு விருது’ - மக்கள் சிந்தனைப் பேரவை அறிவிப்பு

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

nn

 

2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் 'மக்கள் சிந்தனைப் பேரவை' சார்பில் ஜி.டி. நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் 'மக்கள் சிந்தனைப் பேரவை' அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'விருதாளர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது மாநிலம் தழுவிய விருது என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்பவராகவோ பணி செய்பவராகவோ உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

அறிவியல் துறையில் ஆழத்தடம் பதித்த வல்லுநர்களாக விளங்கும் ஐந்து தகுதி மிக்க அறிவியல் அறிஞர்களின் தலைமையில் ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கே இவ்விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பாராட்டு கேடயத்துடன் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் உள்ளடக்கியதாகும். விருது தொகையை எம்.ஏ. முகமது முஸ்தபா அவர்கள் நிறுவனராகக் கொண்ட 'சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை' ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

 

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வு ஊடகங்களிலோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பெயர் பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியான தனது 10 கட்டுரைகளின் தலைப்புகளையும் வெளியான இதழ்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும்.

 

ஆய்வுக் குறிப்புகளையும், ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் எதிர்வரும் 30/07/2023 தேதிக்குள் info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்விருது ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் வழங்கப்பட உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்