Skip to main content

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்; ஆசிரியர் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Gold jewellery robbery at teacher's house in Kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சிக்கு அருகே உள்ள ஜினகாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார். இவர் அப்துல்லாபுரம் மின்சாரத்துறை போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான கல்பனா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று அருள்குமார் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான ஆரணிக்கு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் வீட்டை விட்டுச் செல்லும்போது வெளியே இருந்த விளக்குகளை போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, சொந்த ஊரில் தனது உறவினர்களுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த அருள்குமார், கடந்த 29 ஆம் தேதியன்று வீடு திரும்பியுள்ளார்.

 

அந்த சமயம், வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. வீட்டின் முன் கேட்டில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. ஒருகணம் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்குமார், உடனடியாக வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 5 சவரன் தங்க நகை மற்றும் 120 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

Gold jewellery robbery at teacher's house in Kanchipuram

 

இதனால் அதிர்ந்துபோன அருள்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், பக்கத்து வீட்டிலும் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரியப்பன் என்பவரின் வீட்டிலும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, இரு வீட்டாரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, பட்டா கத்தியுடன் ஒரே பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். அதே சமயம், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.