![Fraud in central government scheme; Dismissal of Panchayat Secretary](http://image.nakkheeran.in/cdn/farfuture/0NpM1v6E4h0FT23cIleakPg4Pnibs87gu4SzFO16Y50/1682660294/sites/default/files/inline-images/th_3983.jpg)
நாமக்கல் அருகே ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கையெழுத்தை காசோலைகளில் போலியாகப் போட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பி.ஆயிபாளையம் ஊராட்சி மன்றத்தில் அண்ணாதுரை என்பவர் செயலராகப் பணியாற்றி வருகிறார். இந்த ஊராட்சி மன்றத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதித்தல், இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டப்பணிகள் தொடர்பாக ஊராட்சி செயலர் அண்ணாதுரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கையொப்பத்தை காசோலைகளில் போலியாகப் போட்டு பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்யா மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பி.ஆயிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் அண்ணாதுரை மீதான புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஊராட்சிகள் உதவி இயக்குநர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.