Skip to main content

சாலையில் தேங்கிய தண்ணீரில் மீன்பிடித்து, நாற்று நட்டு போராட்டம்; அமைச்சர் தொகுதியின் அவலம்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

 

 

அமைச்சர் காமராஜின் தொகுதியில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தெருவில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன் பிடித்தும், நாற்று நடவு செய்தும், பாடை கட்டி தூக்கிச் சென்றும் நூதனமான முறையில் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகின்றனர் .

 

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பூந்தோட்டம் புதுத்தெரு கிராமத்தில், சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக தரமான சாலை வசதி செய்துதர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். லேசாக மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி குளம்போல் தண்ணீர் தேங்கிவிடும் நிலையே இருந்துவருகிறது.

 

இது குறித்து வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார ஊராட்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகள் பலரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

 

இந்தச் சூழலில் இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி சாலையில் நாற்று நட்டும், தெருவில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்பிடித்தும், பாடை கட்டி தோளில் சுமந்து தண்ணீரில் கடந்து சென்றும் நூதனமுறையில் போராட்டம் செய்தனர்.

 

ஊர்வலமாகச் சென்ற மக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதோடு கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கொட்டும் மழையிலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

''இதற்கு மேலும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் தேர்தலில் அமைச்சர் காமராஜுக்கு எதிராகப் போராட்டம் செய்து சரியான பாடம் புகட்டுவோம்" என்கிறார்கள் வாலிபர் சங்கத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.