
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி பாலமுருகன். கடந்த 12 வருடத்திற்கு முன் கலைச்செல்வி என்பவரை திருமணம் முடித்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி சிங்கிவயல் பகுதியில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இன்று காலை பாலமுருகன், தனது 5 வயது மகனான கருப்பையாவுடன் அருகிலுள்ள ஆதினமிளகி என்பவரது கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆதினமிளகி பாலமுருகனுடன் தகராறு செய்து கையில் இருந்த அரிவாளால் பாலமுருகனின் நெஞ்சின் நடு பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இரத்தம் வழிய வழிய அங்கிருந்து ஓடிய பாலமுருகன் சிறிது தூரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தன் கண் முன்னே தந்தை அரிவாளால் வெட்டியதை கண்ட சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் ஓடிவருவதற்குள், ஆதினமிளகு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சியிலிருந்து தடயறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின் பாலமுருகனின் உடலை கைப்பற்றிய போலீஸார் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வளநாடு போலீஸார் தலைமறைவாகியுள்ள ஆதினமிளகியை தேடி வருகின்றனர்.