
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் வரை தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் 26 ஆம் தேதி மாலை வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தந்தை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கன.குறிஞ்சி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழக மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் சித்திக், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் லுக்மானுல் ஹாக்கிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "மோடி அரசே... மோடி அரசே... விவசாயிகளை கார்பரேட் கம்பெனிகளுக்கு அடமானம் வைக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறு..." எனக் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.