Skip to main content

திமுக வட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக்கொலை!

Published on 07/08/2021 | Edited on 08/08/2021
DMK circular secretary passed away

 

திமுக வட்ட செயலாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சண்முகாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் அவ்வூரில் உள்ள  முனியசாமி கோவில் கொடை விழாவிற்கு  நேற்று இரவு சென்றுள்ளார். கோவில் கொடை விழாவில் போதையில் நடனமாடிய ஒருவரை கண்டித்துள்ளார். அதனால் அங்கு வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கொடை விழா முடிந்து இன்று(07.08.2021) அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்ட நடராஜன் ராமசாமிபுரத்தில் உள்ள தனது ஏற்றுமதி, இறக்குமதி  நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். அந்த தகராறு ஒரு கட்டத்திற்கு மேல் முற்றவே ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் நடராஜனை அரிவாளால் சரமாரியாக  வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் சரமாரி வெட்டுப்பட்ட நடராஜனை மீட்டு தூத்துக்குடி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவலறிந்த மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு கணேசன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவி  காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட கும்பல் நடராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர், மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மேலும் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்